Thursday 30 July 2009

கண்ணன்




கண்ணன் பக்தி

கண்ணன் பக்தி சேர்ந்திடில்
கவலை யாவும் தீர்ந்திடும்.
மண்ணை வாரித் தின்றவன் ;
மலையைத் தூக்கி நின்றவன். .(கண்)

வீட்டில் திருடும் வெண்ணெயை
வெளியில் தானம் பண்ணுவான் ;
நாட்டில் சிறுவர் யாவரும்
நன்மை கொள்ளக் கூவுவான். (கண்)

பெண்ணைக் காணில் ஓடுவான் ;
பிறரைக் காணில் வாடுவான் ;
எண்ணம் என்ன தீயதோ !
இல்லை ; முற்றும் தூயதே. (கண்)

எண்ணி றந்த கோபிகள்
இவனு டன்சல் லாபிகள் !
பெண்ணில் காமம் அல்லவே
பிள்ளை பெற்ற தில்லையே. (கண்)

தூய அன்புக் காதலைத்
துலங்க வைக்கும் ஜோியான்
நேய மாகும் கண்ணணை
நிந்தை நீக்கி எண்ணுவோம். (கண்)

என்றும் என்றும் பாலனாய்
இன்பக் கேலி லோலனாய்க்
கன்று காலி மேய்ப்பதில்
களித்து லோகம் காப்பவன். .(கண்)

புலனை வெல்லும் கீதையைப்
புகலும் கண்ணன் மேதையை
நலனி லாத காமியாய்
நாம்நி னைத்தல் தீமையாம். (கண்)

ஆண்மை என்ற வன்மையும்
அன்புப் பெண்மை மென்மையும்
மாண்பிற் சேர்ந்த வேலையே
மாயக் கண்ணன் லீலையே. (கண்)

கண்ணன் லீலை

கண்ணன் என்றஒரு சிறுவன்-என்
கருத்தைக் கொள்ளைகொண்ட ஒருவன்
எண்ண எண்ண அவன்பபெருமை-தனை
என்ன சொல்லுவேன் அருமை !

சிறுவன் என்று நினை யாமல்-அவன்
செயலைக் கூந்துநினைப் போமேல்
திறமை யோடுசெயல் புரியும்-நல்ல
தீரம் நம்மனதில் விரியும்.

அன்பு என்றஒரு எண்ணம்-தரும்
அழகு வடிவமே கண்ணன்.
துன்பம் நேருகிற போது-எண்ணித்
துயரம் தீரஒரு தோது.

சூது போலப்பல புரிவான்--உலகச்
சூதை வெல்லவழி தருவான்.
தீது போலஒன்று செய்வான்--அதில்
திகழும் நன்மைபல பெய்வான்.

ஆணின் அழகுமிக வருவான்--பெண்கள்
ஆவிசோர மயல் தருவான்.
நாணிப் பெண்அருகிற் செல்வாள்--அவன்
நகைத்துப் பெண்வடிவு கொள்வான்.

பெண்ணின் வடிவழகில் வந்தே--ஆண்கள்
பித்து கொள்ள மயல்தந்து
கண்ணைச் சிமிட்டுவதற் குள்ளே--ஓரு
காளை ஆண்வடிவு கொள்வான்.

தாயைப் போல்எடுத்தே அணைப்பான்-உடனே
தந்தை போற்கடிந்து பணிப்பான்.
மாயக் காரமணி வண்ணன்-வெகு
மகிமைக் காரன்எங்கள் கண்ணன்.

கலகப் பேச்சும்அவன்வேலை--மாற்றும்
கருணை வீச்சும்அவன் லீலை
உலகம் முழுதும்அவன் ஜாலம்--அதை
உணர்ந்து கொள்வதே சீலம்.


கண்ணன் உறவு

கண்ணன் உறவைப் பிரியாதே
காரியம் இன்றித் திரியாதே
எண்ணம் தூயது என்றானால்
எதுசெய் தாலும் நன்றாகும்.

ஊக்கமும் உறுதியும் உண்டாகும்
உழைப்பிலும் களைப்பெதும் அண்டாதே.
ஆக்கமும் ஆற்றலும் பெறலாகும்
ஆயன் கண்ணன் உறவாலே.

துன்பம் எதையும் தாங்கிடலாம்
துயரம் உடனே நீங்கிடலாம்
அன்பும் அறிவும் பெரிதாகும்
அச்சம் என்பதும் அரிதாகும்.

சிரிப்பும் களிப்பும் நிறைந்துவிடும்
சிடுசிடுப் பெல்லாம் மறைந்துவிடும்
விருப்பம் எதும் சித்திபெறும்
வித்தகக் கண்ணன் பக்தியினால்.

மாடுகள் மேய்க்கும் வேலையிலும்
மகிழ்ந்திடும் கண்ணன் லீலைகளால்
பாடுபட் டுழைத்திட அஞ்சோமே
பாரில் யாரையும் கெஞ்சோமே.

தூதுவன் ஆகித் துணைவருவான்
தொழும்பனைப் போலும் பணிபுரிவான்
ஏதொரு தொழிலும் இழிவல்ல
என்பது கண்ணன் வழிசொல்லும்.

எல்லா உயிரும் இன்பமுறும்
இன்னிசை பரப்பித் தென்புதரும்
புல்லாங் குழலை ஊதிடுவான்
பூமியின் கடமையை ஓதிடுவான்.

பக்தருக் கெல்லாம் அடைக்கலமாய்ப்
பாதகர் தங்களை ஒடுக்கிடுவான்
சக்திகள் பலவும் தந்திடுவான்
சங்கடம் தீர்த்திட வந்திடுவான்.

ஆடலும் பாடலும் மிகுந்துவிடும்
அழகன் கண்ணன் புகுந்தஇடம்
ஓடலும் ஒளித்தலும் விளையாட்டாம்
ஒவ்வொரு செயலும் களியாட்டே.

கண்ணன் பாட்டு

கண்ணன் வருகிற இந்நாளே
களிப்புகள் தருகிற நன்னாளாம்
திண்ணம் அவனருள் உண்டானால்
தீங்கெதும் நம்மை அண்டாது.

அசுரத் தனங்களை இகழ்ந்திடவும்
அன்புக் குணங்களைப் புகழ்ந்திடவும்
விசனம் என்பதை ஒழித்திடவும்
வித்தகக் கண்ணன் வழித்துணையாம்.

அரசரின் குலத்தில் பிறந்தாலும்
ஆயர்தம் குடிசையில் வளர்ந்தவனாம்.
ஒருசிறு பேதமும் எண்ணாமல்
ஒற்றுமை காட்டும் கண்ணாளன்.

எங்கும் எதிலும் வேடிக்கை
இழைப்பது கண்ணன் வாடிக்கை
இங்கும் நாம்அதைக் கடைப்பிடித்தால்
இன்பம் வாழ்க்கையில் தடைப்படுமா?

அடுக்குப் பானையை உருட்டிடுவான்:
அதட்டப் போனால் சிரித்திடுவான்.
துடுக்குக் கண்ணனைக் கண்டவுடன்
தோன்றிய கோபம் சுண்டிவிடும்.

ஒன்றும் தெரியாப் பாலன்போல்
உலகை நடத்தும் லோலன்காண்.
என்றும் இளமை குறையாமல்
எல்லாப் பொருளிலும் உறைவான்காண்.

நம்பின மெய்யரைத் தாங்கிடுவான் ;
நடிக்கும் பொய்யரை நீங்கிடுவான்.
வம்புகள் செய்தால் செல்லாவாம் ;
வாதுகள் அவனிடம் வெல்லாவாம்.

கல்வியில் தேறிச் சிறந்திடலாம் ;
கலைகளின் ரசனை நிறைந்திடலாம் ;
பல்வித நன்மைகள் பெறலாகும் ;
பாலன் கண்ணன் உறவாலே.

பண்ணும் காரியம் முற்றிலுமே
பழுதில் லாமல் வெற்றி பெறும்.
கண்ணன் திருவருள் சூழ்ந்திடுவோம் ;
கவலையில் லாமல் வாழ்ந்திடுவோம்.

Mantra

Mantra